பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!
பாஜகவில் 7 எம்பிக்கள் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்தது பற்றி...
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏழு எம்.பி.க்களையும் மாநிலங்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் ஆகியோா் பாஜகவில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் முன்னிலையில் இணைந்தனா்.
Advertisement
மேலும், ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், ராஜிந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகியோரும் பாஜகவில் இணையவுள்ளதாக ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் கூறியிருந்தாா்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்பிக்கள் இருக்கும் நிலையில், மூன்றில் இரு பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆகையால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சியால் தகுதிநீக்க நடவடிக்கை கோர முடியாது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராகவ் சத்தா உள்பட 7 எம்பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
மேலும், கிரண் ரிஜிஜு தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“இவர்கள் 7 பேரும் ஒருபோதும் நாடாளுமன்ற மரபுகளுக்குப் புறம்பான நடத்தைகளில் ஈடுபட்டதில்லை, இழிவான சொற்களைப் பயன்படுத்தியதில்லை.
பிரதமர் மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின்கீழ் நாட்டைக் கட்டமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேற்கிறோம். பிளவுவாத இந்தியா கூட்டணிக்கு விடைகொடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.