2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் இலங்கையிலோ ஐக்கிய அரபு அமீரகத்திலோ அப்போட்டி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. இதனால் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும். 2022-ல் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13 அன்று நடைபெறும்.
இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் இலங்கையிலோ ஐக்கிய அரபு அமீரகத்திலோ அப்போட்டி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஐசிசி போட்டிக்கும் இதுபோன்று மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். எனினும் இந்தமுறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தகவல் முக்கியத்துவம் அடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு அடுத்த வருடமும் நீடித்தால் 2021 டி20 உலகக் கோப்பை இலங்கையிலோ ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடைபெறும் என இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.