ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது சர்ச்சை: ஹர்பஜன் சிங் விளக்கம்
என்னுடைய பெயரைப் பரிந்துரைக்கும் முடிவை பஞ்சாப் அரசு மாற்றிக் கொண்டது ஏன் எனப் பலரும் கேட்கிறார்கள்.
செய்திகள்ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது சர்ச்சை: ஹர்பஜன் சிங் விளக்கம்
என்னுடைய பெயரைப் பரிந்துரைக்கும் முடிவை பஞ்சாப் அரசு மாற்றிக் கொண்டது ஏன் எனப் பலரும் கேட்கிறார்கள்.
இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களை பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன. இதே போல் பிசிசிஐயும் வீரா், வீராங்கனை பெயா்களை பரிந்துரைத்து அனுப்பியுள்ளது.
இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனான ரோஹித் சா்மாவின் பெயா் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹர்பஜன் சிங் பெயரைப் பரிந்துரைப்பதாக இருந்தது பஞ்சாப் அரசு. கடந்த வருடம் பரிந்துரையைத் தாமதமாக அனுப்பியதால் அது நிராகரிக்கப்பட்டது. எனினும் இந்த வருடம் ஹர்பஜன் சிங்கைப் பரிந்துரை செய்யும் முடிவைக் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் பஞ்சாப் அரசின் செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹர்பஜன் சிங். அவர் கூறியதாவது:
என்னுடைய பெயரைப் பரிந்துரைக்கும் முடிவை பஞ்சாப் அரசு மாற்றிக் கொண்டது ஏன் எனப் பலரும் கேட்கிறார்கள். உண்மை என்னவென்றால், அந்த விருதைப் பெறுவதற்கான தகுதிகள் எனக்கு இல்லை. காரணம், கடைசி மூன்று வருடங்களில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியிருப்பவர்கள் மட்டுமே விருதைப் பெற தகுதியானவர்கள். இதனால் பஞ்சாப் அரசின் மீது தவறு இல்லை. எனது பெயரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது சரியான முடிவு. நான் கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செய்தார்கள். எனவே இதற்கான காரணத்தை யாரும் யூகிக்க வேண்டாம் என்றார்.
40 வயது ஹர்பஜன் சிங், கடைசியாக 2016-ல் இந்திய அணிக்காக விளையாடினார்.