தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 27 முதல் டி20 தொடர் தொடங்குகிறது. அதன்பிறகு டிசம்பர் 4 முதல் தொடங்கும் ஒருநாள் தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் நியூலேண்ட்ஸ், பார்ல் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன.
இந்தத் தொடருக்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த வீரரும் அவருடன் தொடர்பில் இருந்த இரு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அனைவரும் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதேசமயம் இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வியாழன் அன்று தென் ஆப்பிரிக்க அணியினருக்கு மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கரோனா பாதுகாப்பு வளையத்திலிருந்து அந்த வீரர் வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் தற்போது நான்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இன்று தென் ஆப்பிரிக்க வீரர்களிடையே நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கும் பயிற்சி ஆட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறவுள்ளது.
இரு தெ.ஆ. வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதால் திட்டமிட்டபடி ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் கரோனா பரிசோதனைகள் முடிவுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடந்துகொள்வதால் இங்கிலாந்து அணியினர் எவ்வித அச்சமும் இல்லாமல் தொடர்களில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.