இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் ஜோகன்னஸ்பர்க்கில் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதால் கே.எல். ராகுலைப் புதிய துணை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
29 வயது கே.எல். ராகுல், இந்திய அணிக்காக 40 டெஸ்டுகள், 38 ஒருநாள், 56 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.