கரோனா அச்சுறுத்தல்: ஆஸி. ஓபன் பயிற்சி ஆட்டங்கள் ரத்து
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் ரத்தாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் ரத்தாகியுள்ளன.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் முன்னோட்டமாக மெல்போர்ன் பார்க்கில் பல்வேறு டென்னிஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டென்னிஸ் வீரர்கள் ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பு தனிமை முகாமில் 14 நாள்கள் தங்கியிருந்தனர். 14 நாள்களை நிறைவு செய்த பின்னர், வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஹோட்டலில் தனிமை முகாமில் இருந்த 520 டென்னிஸ் வீரர்கள் மற்றும் பணியாளர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தனிமை முகாமில் இருந்து வெளியே வரலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ஆஸ்திரேலிய ஓபனுக்கான பயிற்சி ஆட்டங்கள் ரத்தாகியுள்ளன. எனினும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி திட்டமிட்டபடி திங்கள் முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.