சென்னை டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் தடுமாறும் இந்திய அணி! 300 ரன்கள் முன்னிலை!
விராட் கோலியைத் தவிர இதர வீரர்கள் வந்த வேகத்தில் ஓய்வறைக்குத் திரும்பினார்கள்...
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 300 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. 2-ம் நாள் முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 25, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. விராட் கோலியைத் தவிர இதர வீரர்கள் வந்த வேகத்தில் ஓய்வறைக்குத் திரும்பினார்கள். 36-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களுடன் விளையாடி வருகிறது. கோலி 29, அஸ்வின் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.