பிரதமர் கேரளம் வருகை: இன்றும் நாளையும் கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையில் டிரோன் பறக்கத் தடை..
பிரதமர் மோடியின் கேரள பயணத்தையொட்டி இன்றும் நாளையும்(மார்ச் 28, 29) கோவையின் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பிரதமர் மோடி கேரளத்தில் பாலக்காடு, திருச்சூர் ஆகிய பகுதிகளில் நாளை(மார்ச் 29) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்வதுடன் சாலை வலமும் மேற்கொள்கிறார்.
Advertisement
Advertisement
இதையொட்டி பிரதமர் மோடி நாளை மதியம் 2 மணியளவில் கோவை வருகிறார். கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பாலக்காடு செல்கிறார்.
இதனால் கோவையின் முக்கிய பகுதிகளில் நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.