அபுதாபி: அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் வெரோனிகா குடர்மெட்டோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார் சபலென்கா. மேலும், தொடர்ச்சியாக 3-ஆவது சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார். கடந்த சீசனில் ஆஸ்ட்ரேவா, லின்ஸ் ஓபன் போட்டிகளில் அவர் வாகை சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச மகளிர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் சபலென்கா. இதுவரை ஒட்டுமொத்தமாக 13 இறுதிச்சுற்றுகளில் விளையாடியுள்ள சபலென்கா 9-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அபுதாபி ஓபனின் இறுதிச்சுற்றில் விளையாடிய சபலென்கா, வெரோனிகா ஆகிய இருவரும் அடுத்ததாக ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கவுள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா செல்லும் அவர்கள், அங்கு கரோனா தடுப்பு தனிமை முகாமில் குறிப்பிட்ட நாள்கள் இருந்துவிட்டு, அதன்பிறகு ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.