முகப்பு
செய்திகள்

மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு: துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் என தில்லி காவல்துறை அறிவிப்பு

சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தில்லி காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது.

Updated On : 18 மே, 2021 at 1:09 PM
பகிர்:

கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தில்லி காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த 37 வயது சுஷில் குமார், மல்யுத்தப் போட்டியில் இரு ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வென்றவர். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 

இந்திய ரயில்வே ஊழியரான சுஷில் குமார், வடக்கு தில்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் சிறப்புப் பணியில் இருந்தார். அந்த மைதானத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர் சாகர் ராணா கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. இதனால் மோதலில் ஈடுபட்ட சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து பத்து நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்கள் சுஷில் குமாரும் அவருடைய நண்பர்களும். இவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுஷில் குமார், நாட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது லுக்ட் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுஷில் குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அவருடைய நண்பர் அஜய் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் சன்மானமாக வழங்கப்படும் என தில்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் சுஷில் குமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.