இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர், அறிமுக டெஸ்டில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி, 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 75, ஜடேஜா 50 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று, ஜடேஜா ரன் எதுவும் சேர்க்காமல் 50 ரன்களில் செளதி பந்தில் போல்ட் ஆனார். அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். சஹா 1 ரன்னில் ஆட்டமிழக்க அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். டிம் செளதி இதுவரை 4 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள். இந்திய அணி, 97 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின், அக்ஷர் படேல் களத்தில் உள்ளார்கள்.