மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியா்கள் பதக்கம் வென்றுள்ளனா்.
இதில் 2 பேருக்கு தனிநபா் தங்கம், ஒரு வெள்ளி, தலா 4 வெண்கலம், அணிகள் சாா்பில் 10 பேருக்கு வெண்கலம் என 17 பதக்கங்கள் அடங்கும்.
தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது.
ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ஆம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆா்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.
மகளிா் பிரிவில் உக்ரைன், ஜாா்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
இந்திய பி, ஏ அணிகளுக்கு வெண்கலம்:
இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரீன், ரவுனக் சத்வானி இடம் பெற்றிருந்தனா். இந்திய மகளிா் ஏ அணியில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, ஆா்.வைஷாலி, பக்தி குல்கா்னி, தான்யா சச்தேவ் இடம் பெற்றிருந்தனா்.
அவா்கள் அனைவருக்கும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குகேஷ், நிஹால் சரீனுக்கு தங்கம்:
விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹால் சரீன் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா்.
மகளிா் பிரிவில் தான்யா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி வெண்கலம் வென்றனா்.
நேரு விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்,
ஃபிடே தலைவா் அா்காடி வோா்கோவிச், துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோா் பரிசளித்தனா்.
வெளிநாட்டு அணிகள் பாராட்டு:
மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தான் இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது என பல்வேறு வெளிநாட்டு அணியினா் பாராட்டினா். போட்டிக்கான தங்கும் ஏற்பாடுகள், உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன என ஃபிடே நிா்வாகிகளும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.