வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், புஜாரா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
5-வது விக்கெட்டுக்கு இருவரும் 149 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அக்ஷர் படேல் 14 ரன்களுக்கு அவுட்டானார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியவுடன் 86 ரன்களில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவிசந்திரன் அஸ்வின், குல்தீப் ஜோடி நிதானமாக ரன்களை சேர்ந்தனர்.
8வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து குல்தீப் 40, முகமது சிராஜ் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. தொடர்ந்து, வங்கதேச அணியினர் விளையாடி வருகின்றனர்.