இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் தோற்குமா என அஞ்சுகிற இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இத்தகவல் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியது.
கடந்த 35 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் 250+ ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதில்லை.
பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோ, 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று இந்திய அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 45, ஷ்ரேயஸ் ஐயர் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில் இந்திய அணி ஏற்கனவே 300 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை மட்டுமே எதிரணிகள் இந்தியாவுக்கு எதிராக 250+ ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளன.
1977-ல் ஆஸ்திரேலியா 339 ரன்களும் 1987-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி 276 ரன்களும் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக எடுத்து வெற்றி பெற்றன. அதற்குப் பிறகு கடைசி இன்னிங்ஸில் எதிரணிகளுக்கு 250+ ரன்கள் இலக்கு நிர்ணயித்ததில் ஒருமுறையும் இந்திய அணி தோல்வி கண்டதில்லை. சில ஆட்டங்களில் டிரா ஆகியுள்ளன. அதிகபட்சமாக 2013-ல் தோனி தலைமையிலான இந்திய அணி ஜொஹன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு 458 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தெ.ஆ. அணி, 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டு டிரா செய்தது.
இதனால் 5-வது டெஸ்டில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே ரசிகர்கள் கருத வேண்டும்.