ஒரு சில ஆட்டங்களைக் கொண்டு ருதுராஜின் திறமையைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த டி20 தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 96 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 131.50. இதனால் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ருதுராஜுக்கு ஆதரவாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:
ஒரு தொடரில் விளையாடுவதை வைத்து வீரர்களை மதிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன். வாய்ப்பு கிடைத்த அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள். டி20 கிரிக்கெட்டில் சில நல்ல ஆட்டங்களும் மட்டுமல்லாமல் சில மோசமான ஆட்டங்களும் அமையும். ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். ஒரு இன்னிங்ஸில் தன்னிடம் உள்ள திறமையை நன்கு வெளிப்படுத்தினார் ருதுராஜ் கெயிக்வாட். டி20 கிரிக்கெட்டில் சிலசமயம் ரன்கள் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எந்த வீரரின் பங்களிப்பிலும் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. நேர்மறை எண்ணங்களுடன் அதிரடியாக விளையாடவே நாங்கள் எண்ணினோம். அதை முயலும்போது எப்போதும் சாதகமான முடிவுகள் கிடைக்காது. ஆனால் என்னவிதமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் என்றார்.