ஃபின்லாந்தில் நடைபெறும் குவோர்டேன் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சீசனில் அவர் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் பிரிவில் நீரஜ் சோப்ரா சிறந்த முயற்சியாக 86.69 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் 86.64 மீட்டரை எட்டி 2-ஆம் இடமும், நடப்பு உலக சாம்பியனும், கிரனாடா வீரருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் வீசி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
முன்னதாக மொத்தமே 3 முயற்சிகள் மேற்கொண்ட நீரஜ், அதில் இரண்டை ஃபெüல் செய்தார். எனவே தனது ஒரே முயற்சியின் பலனாகவே அவர் பதக்கம் வென்றார். என்றாலும், கடந்த வாரம் இதே ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றதை விட இது குறைவாகும். நீரஜ் சோப்ரா அடுத்ததாக, ஸ்டாக்ஹோமில் வரும் 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் டைமண்ட் லீக்கில் பங்கேற்கிறார்.
இதனிடையே, குவோர்டேன் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரும், பாரா வீரருமான சந்தீப் செüதரி 60.35 மீட்டர் தூரம் எறிந்து 8-ஆம் இடம் பிடித்தார்.