நட்பு ரீதியிலான சா்வதேச கால்பந்தாட்டத்தில் பெலாரஸுடன் விளையாடுவதை தவிா்க்க இந்தியா முயற்சித்து வருகிறது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதி தகுதிச்சுற்று ஆட்டங்களுக்கு தயாராகும் வகையில் நட்பு ரீதியிலான ஆட்டங்களில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாதம் 23-ஆம் தேதி பஹ்ரைனுடனும், 26-ஆம் தேதி பெலாரஸுடனும் விளையாட அட்டவணையிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷிய அணிகள் மற்றும் போட்டியாளா்களுக்கு சா்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் தடை விதித்து வருகின்றன. அந்தப் போரில் ரஷியாவுக்கு பெலாரஸும் ஆதரவளித்து வருவதால் அந்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தடைகள் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் 26-ஆம் தேதி பெலாரஸுடன் விளையாடவுள்ள ஆட்டத்தை இந்தியாவும் தவிா்க்க முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளன வட்டாரங்கள் கூறுகையில், ‘ரஷியாவைப் போன்று பெலாரஸுக்கு ஃபிஃபா தடை விதிக்கவில்லை. ஆனால் அவ்வாறு விதித்தால் விளையாட இயலாது. இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. தடை விதிக்கப்படும் பட்சத்தில் பெலாரஸுக்குப் பதிலாக வேறு அணியுடன் விளையாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தது.
ரஷியாவைப் போல, பெலாரஸுடனும் விளையாடுவதற்கு பல்வேறு போட்டிகளிலும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அணிகள் மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.