மஹாராஷ்டிரத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2022 போட்டியில் குறைந்த அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)
இந்நிலையில் இந்தியா முழுக்க கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மஹாராஷ்டிர அரசுடன் பிசிசிஐ நடத்திய பேச்சுவார்த்தையில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 15 வரை 25% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும், அதன்பிறகு கரோனா பரவலின் பாதிப்பைக் கொண்டு கூடுதல் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க பிசிசிஐயும் மஹாராஷ்டிர அரசும் முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.