பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் மற்றும் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் நெதர்லாந்தைச் சேர்ந்த போடிக் வான் டி ஸாண்ட்ஸ்கல்ப்பை எதிர்கொண்டார் நடால். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இது நடாலின் 301-வது வெற்றி. இதன்மூலம், நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிக்க | செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ்: பிரக்ஞானந்தாவுக்கு 2-ஆம் இடம்
4-வது சுற்றில் அவர் கனடாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஆகெரை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நடால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்.
இதேபோல் மற்றொரு முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 1 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்லோவேனியா வீரரான அல்ஜாஸ் பெடெனை 6-3, 6-3, 6-2 என்கிற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார் ஜோகோவிச்.
இதன்மூலம், 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், அந்த சுற்றில் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த டீகோ ஸ்காவார்ட்ஸ்மேனை எதிர்கொள்கிறார்.
நடால் மற்றும் ஜோகோவிச்சின் 4-வது சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது.