முகப்பு
செய்திகள்

ஒரு வீரரின் திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் வளர்த்தெடுக்க நினைக்கக் கூடாது: கெளதம் கம்பீர்

விஜய் சங்கர், ஷிவம் டுபே, இப்போது வெங்கடேஷ் ஐயர் என...

Updated On : 1 பிப்ரவரி, 2022 at 11:52 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:14 PM

ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்தால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்குத் தேர்வானார். இதுவரை இதுவரை 2 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் பலரும் எதிர்பார்த்தது போல அவரால் ஆல்ரவுண்டர் திறமையைச் சர்வதேச ஆட்டங்களில் வெளிப்படுத்த முடியவில்லை. 5 சர்வதேச ஆட்டங்களிலும் சேர்த்து 8 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அவர் தேர்வாகவில்லை.

இந்நிலையில் பாண்டியா இல்லாததால் சரியான ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்ய இந்திய அணி தடுமாறுவது பற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

Advertisement

சர்வதேச கிரிக்கெட் என்பது திறமையை வெளிப்படுத்தும் இடம் என எப்போதும் நம்புவேன், அங்கு வந்து திறமையை வளர்த்தெடுக்க முயலக்கூடாது. வளர்த்தெடுக்கும் முயற்சியை உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்தியா ஏ அளவிலும் செய்யவேண்டும். இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டால், திறமையை வெளிப்படுத்த தயாராக இருக்கவேண்டும். கபில் தேவுக்குப் பிறகு ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இல்லாதது பற்றி நீண்ட நாளாகப் பேசி வருகிறோம். ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஆல்ரவுண்டர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் அதற்குத் தயாராக இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தி அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி அவர்களை மாற்றக் கூடாது. விஜய் சங்கர், ஷிவம் டுபே, இப்போது வெங்கடேஷ் ஐயர் என முதலில் தேர்வு செய்து, பிறகு உடனடியாக நீக்குவதைப் பார்த்து வருகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.