பிப்ரவரி மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல இந்திய வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.
2022 ஜனவரி மாதம் தனது ஓய்வு பற்றி முதல்முறையாகத் தெரிவித்தார் சானியா மிர்சா. இதுவே எனது கடைசிப் பருவம் என முடிவெடுத்துள்ளேன். ஒவ்வொரு வாரமாகக் கடந்து வருகிறேன். முழுப் பருவமும் விளையாடுவேனா எனத் தெரியாது. ஆனால் விளையாட நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு மூன்று வயது. இந்த வயதில் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். இதை நான் மனத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய உடல் சோர்வடைந்து வருகிறது. வயது அதிகமாவதால் காயமானால் உடனடியாக அதிலிருந்து குணமாக முடிவதில்லை என்றார்.
இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் டபிள்யூ 1000 போட்டியுடன் முடித்துக் கொள்கிறேன். காயம் காரணமாக நான் வெளியேற விரும்பவில்லை. எனவே பயிற்சியெடுத்து வருகிறேன். துபை போட்டியுடன் ஓய்வு பெறுவதே தற்போதைய திட்டம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.