முகப்பு
செய்திகள்

கவாஜா-கிரீன் சதம்: முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில், இன்று (மார்ச் 10) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 170 பந்துகளில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில், 18 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல, ஏற்கனவே சதம் அடித்திருந்த கவாஜா 150 ரன்களைக் கடந்து சிறப்பாக விளையாடினார். அவர் 180 ரன்களுக்கு அக்சர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமலும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின், ஜோடி சேர்ந்த நாதன் லயன் மற்றும் டோட் முர்பி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தனர். இருப்பினும் முர்பி 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அவரைத் தொடர்ந்து நாதன் லயன் 34 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.