இந்தூர் ஆடுகளம்: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ மேல்முறையீடு
இந்தூர் ஆடுகளத்துக்கு ஐசிசி நடுவர் அளித்த அபராதப் புள்ளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ.
செய்திகள்இந்தூர் ஆடுகளம்: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ மேல்முறையீடு
இந்தூர் ஆடுகளத்துக்கு ஐசிசி நடுவர் அளித்த அபராதப் புள்ளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ.
இந்தூர் ஆடுகளத்துக்கு ஐசிசி நடுவர் அளித்த அபராதப் புள்ளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது.
இந்தூர் டெஸ்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் குறித்து தனது தீர்ப்பை வழங்கியது ஐசிசி. இந்தூர் ஆடுகளத்துக்கு மோசம் எனத் தீர்ப்பு எழுதிய ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட், இந்தூர் விளையாட்டுத் திடலுக்கு மூன்று அபராதப் புள்ளிகளையும் வழங்கினார். பேட்டுக்கும் பந்துக்குமான சமமான போட்டி ஏற்படவில்லை. ஆடுகளம், ஆரம்பம் முதல் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது என பிராட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். 5 வருடக் காலக்கட்டத்தில் எந்த ஒரு விளையாட்டுத் திடல், ஐந்து அபராதப் புள்ளிகளைப் பெறுகிறதோ அதனால் ஒரு வருடத்துக்கு எந்தவொரு சர்வதேச ஆட்டத்தையும் நடத்த அனுமதி வழங்கப்படாது.
3-வது டெஸ்ட் முதலில் தரம்சாலா மைதானத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்குச் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்தூருக்கு 3-வது டெஸ்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு, இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டுகளில் 2017-ல் புணே டெஸ்ட் ஆடுகளம் ஐசிசியால் மோசம் என மதிப்பிடப்பட்டது. அந்த டெஸ்டையும் ஆஸ்திரேலியா தான் வென்றது. அப்போதும் கிறிஸ் பிராட் தான் போட்டி நடுவராக இருந்தார். தற்போதைய டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகள் நடைபெற்ற ஆடுகளங்களுக்கு சராசரி என மதிப்பிட்டுள்ளார் போட்டி நடுவர் ஆன்டி பைகிராஃப்ட்.
இந்நிலையில் இந்தூர் டெஸ்ட் ஆடுகளத்துக்கு ஐசிசி வழங்கிய அபராதப் புள்ளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது பிசிசிஐ. இதையடுத்து ஐசிசியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து அலசி ஆராய்ந்து தங்களுடைய முடிவை அடுத்த 14 நாள்களுக்குள் தெரிவிப்பார்கள். பொதுவாக சராசரிக்கும் கீழ், மோசம், தகுதியற்றது ஆகிய மதிப்பீடுகளைப் பெறும் விளையாட்டுத் திடலுக்குத்தான் அபராதப் புள்ளிகள் விதிக்கப்படும்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டை ராவல்பிண்டியில் நடத்தியது பாகிஸ்தான். இதன் ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழ் என மதிப்பீடு வழங்கினார் போட்டி நடுவர் பைகிராஃப்ட். இந்த முடிவை எடுத்து மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.