ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் விராட் கோலி அவரது பிறந்த நாளான இன்று (நவம்பர் 5) சமன் செய்தார்.
உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் அடித்த இந்த சதம் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது.
இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளனர்.
இந்த நிலையில், சதம் விளாசி தனது சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சிறப்பாக விளையாடினீர்கள் விராட் கோலி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் 49-லிருந்து 50-க்கு செல்ல (49 வயதிலிருந்து 50 வயதுக்கு) 365 நாள்கள் எடுத்துக் கொண்டது. அடுத்த சில நாள்களில் 49-வது சதத்திலிருந்து 50-வது சதத்தை விளாசி எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.