அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்டர் விராட் கோலி விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியா கோப்பை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை, 2025-இல் நடைபெறவுள்ள ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ பொறுத்தவரை டி20 போட்டிகளில் தொடர்ந்து இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடவில்லை. ஹார்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருப்பதால் இன்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 போட்டிக்கு ஹார்திக் பாண்டியா தலைமையிலேயே இந்திய அணி களமிறங்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது.
மேலும், டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித்தும், கோலியுமே முடிவெடுத்துக் கொள்ள பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பையின்போது ரோஹித் மற்றும் கோலிக்கு கிட்டத்திட்ட 40 வயதாகிவிடும் என்பதால் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை தயார் செய்யும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது.
இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ரோஹித்தும், கோலியும் விரைவில் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.