முகப்பு
செய்திகள்

மூவர் சதம் விளாசல்: இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்களின் அசத்தல் சதங்களால் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:06 AM
பகிர்:

தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்களின் அசத்தல் சதங்களால் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையில் தில்லியில் இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா  முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், டி காக்குடன் ஜோடி சேர்ந்தார் ராஸி வாண்டர் துசென். இந்த இணை அபாரமாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். டி-காக் 84  பந்துகளில் 100 ரன்களும் (12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), வாண்டர் துசென் 110 பந்துகளில் 108  ரன்களும் (13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து  ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்கரம் அதிரடியான ஆட்டத்தினால் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் க்ளாசன் (32 ரன்கள்), டேவிட் மில்லர் (39 ரன்கள்) போன்றோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 400 ரன்களைக் கடந்தது. 

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5  விக்கெட்டுகளை இழந்து 428  ரன்கள் எடுத்தது. 

இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 2  விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா, மதீஷா பதிரானா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →