இந்தியா திணறல்: முதல் இரண்டு ஓவர்களில் 0 ரன்னில் ஆட்டமிழந்த மூன்று வீரர்கள்!
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, இந்திய அணிக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரை ஜோஸ் ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஆஸ்திரேலிய அணியின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணியின் வீரர்கள் இஷான் கிஷன், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
200 ரன்கள் என்பது சிறிய இலக்காக இருந்தாலும் இந்திய அணி முதல் இரண்டு ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்ததால், எப்படி இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு போட்டியில் வெற்றிப் பெற போகிறது என்ற கவலையில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர்.