இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் களமிறங்கியது.
இதையும் படிக்க: அறிமுக வீரராக களமிறங்கும் திலக் வர்மா; இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு!
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். லிட்டன் தாஸ் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தன்சித் ஹாசன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அனமுல் ஹாக் 4 ரன்களிலும், மெஹிடி ஹாசன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், வங்கதேசம் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் தௌகித் ஹிரிடாய் களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக விளையாடி வங்கதேச அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்தனர். கேப்டன் ஷகிப் 85 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். தௌகித் ஹிரிடாய் 81 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் நசும் அகமது மற்றும் மஹேதி ஹாசன் மட்டுமே ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.