தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார்.
அடிக்கடி காயம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நீண்ட நாள்கள் பயணிக்கவும் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் களமிறக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அறிமுக வீரராக களமிறங்கும் திலக் வர்மா; இந்திய அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கு ஓய்வு!
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர்கள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எந்தெந்த வடிவிலான போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். பும்ராவின் வேலைப்பளு சரிவர கவனிக்கப்பட வேண்டும். பும்ரா போன்ற வீரர்களின் பந்துவீச்சு தனித்துவமானது. இதுபோன்ற தனித்துவமான பந்துவீச்சு திறன் கொண்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களால் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட முடியாது. அதனால், அவர்களுக்கு ஏற்ற போட்டிகளை தேர்ந்தெடுத்து அவர்களை களமிறக்க வேண்டும். அவர்களது கிரிக்கெட் பயணத்துக்கும் இது மிக உதவியாக இருக்கும்.
இலங்கை அணியிலும் இளம் திறமைசாலிகள் உள்ளனர். அவர்களது திறமை மேலும் மெருகூட்டப்பட வேண்டும். பதிரானாவுக்கு 20 வயதுதான் ஆகிறது. அவர் கிரிக்கெட் பயணத்தில் நீண்ட தொலைவு போக வேண்டியுள்ளது. ஆனால், அது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கைகளில்தான் இருக்கிறது என்றார்.