முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் சர்ச்சை: கேரள அணியின் கோரிக்கை நிராகரிப்பு!

பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் உண்டான சர்ச்சை தொடர்பாக கேரள அணியின் கோரிக்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் உண்டான சர்ச்சை தொடர்பாக கேரள அணியின் கோரிக்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.

பெங்களூரு எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளுக்கிடையிலான நாக் அவுட் ஆட்டம் பெங்களூருவில் மார்ச் 3 அன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் 7-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ஃப்ரீ கிக் ஒன்று வழங்கப்பட்டது. இதை உடனடியாகப் பயன்படுத்திக்கொண்டு எதிரணி வீரர்கள் வரிசையில் நிற்பதற்கு முன்பு பந்தை அடித்து கோலாக மாற்றினார் சுனில் சேத்ரி. முறையான அவகாசம் வழங்காமல், வீரர்கள் வரிசையாக நிற்பதற்கு முன்பு கோல் அடிக்கப்பட்டதால் இதற்கு கேரள வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த கேரள அணியின் பயிற்சியாளர் இவான், அனைத்து வீரர்களையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னார். இதையடுத்துத் திடலை விட்டு கேரள வீரர்கள் வெளியேறினார்கள்.

ஆட்டம் முடிவடைவதற்கு முன்பே கேரள வீரர்கள் வெளியேறியதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் நேரம் முடியும் வரை மீண்டும் அவர்கள் திரும்பாததால் 120 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் முடிந்ததாக அறிவித்தார் நடுவர். இதனால் 1-0 என கேரள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு அணி. ஆட்டம் முடியும் முன்பே வெளியேறியதால் கேரள அணிக்கும் அதன் பயிற்சியாளருக்கும் ஐஎஸ்எஸ் போட்டியின் நிர்வாக அமைப்பு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக கேரள அணி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் சில கோரிக்கைகளை வைத்தது. விசில் ஊதாமல் ஃப்ரீ கிக் எடுக்க நடுவர் அனுமதித்தார். இதனால் இந்த ஆட்டம் மீண்டும் விளையாடப்பட வேண்டும். நடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தது. இந்நிலையில் கேரள அணியின் இந்தக் கோரிக்கையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது. விதிமுறைகள், நடுவரின் அறிக்கைகளைக் கொண்டு இந்த விவகாரத்தை அலசினோம். போட்டியின் விதிமுறையில் உள்ளது போல நடுவரின் முடிவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. நடுவரின் முடிவே இறுதியானது என இந்திய கால்பந்து சம்மேளனம் அறிக்கை வெளியிட்டு கேரள அணியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments