பாபர் அசாமுக்கு விராட் கோலி வழங்கிய பரிசு!
இந்தியா பாகிஸ்தான் போட்டி முடிந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பரிசு வழங்கியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13வது உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5--ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சனிக்கிழமை நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 86 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இந்தப் போட்டி முடிந்த நிலையில் மைதானத்தில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் சந்தித்துக் கொண்டனர். அப்போது விராட் கோலி தனது கையெழுத்திட்ட டி-சர்ட்டை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமுக்கு அன்பு பரிசாக வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு இந்திய வீரர் விராட் கோலி அவர் பயன்படுத்திய பேட், கையுறை, ஜெர்சி உள்ளிட்டவற்றை வழங்கிய நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும் பரிசு வழங்கி அவரை கௌரவப்படுத்தியது கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றுள்ளது.