மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்தாது: ஜெய் ஷா
மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்துவது குறித்து ஜெய் ஷா விளக்கம்.
மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்தாண்டு அக்டோபர் மாதம் மகளிர் டி20ன் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஷசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கு மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு புதன்கிழமை ஜெய் ஷா அளித்த பேட்டியில் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த ஜெய் ஷா, “வங்கதேச நிலைமையை தொடர்ந்து, இந்தியாவில் உலகக் கோப்பை நடத்துவது குறித்து ஐசிசி முறையிட்டது. ஆனால், மழைக்காலம் என்பதால் இந்தியாவில் நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அடுத்தாண்டு ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்து எண்ணம் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், 2022-க்கு பிறகு இந்தியாவில் ‘பிங்க் பால்’(இரவு நேர டெஸ்ட்) போட்டிகள் நடத்தாது குறித்து ஜெய் ஷாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
“பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடத்தும் எண்ணம் இல்லை. இந்தியாவில் இரண்டு நாள்களில் பிங்க் பால் போட்டிகள் முடிந்துவிடும், இதனால், பார்வையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள் பணத்தை இழக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளையும் நாம் பார்க்க வேண்டும்.
ஒரு ரசிகர் ஐந்து நாள்கள் டெஸ்ட் போட்டியை பார்க்க டிக்கெட் வாங்குகிறார். இரண்டு நாள்களில் போட்டி முடிந்தால், அவர்களுக்கு பணம் திருப்பி தரும் நடைமுறை இல்லை.” எனத் தெரிவித்தார்.
இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட 3 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளும் 3 நாள்களை தாண்டியதில்லை. அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டி, இரண்டு நாள்களிலேயே முடிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.