ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு ஓய்வளிக்க வேண்டுமென பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் ஓய்வளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பயிற்சியாளராக மாறுகிறாரா டேவிட் வார்னர்?
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு ஓய்வளிக்க வேண்டுமென பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஷகின் அஃப்ரிடியின் வேலைப் பளுவை குறைப்பதற்காக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அவரது உடலை மிகவும் வருத்திக் கொள்வதை அவர் விரும்பாததால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வளித்தால் வேலைப்பளுவை சமாளிக்க முடியும் என்று கருதினோம். இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் பந்துவீச்சாளர் ஒருவரின் வேலைப்பளுவை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் ஷகின் அஃப்ரிடிக்கு ஓய்வளிக்கப்பட்டதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டி20 போட்டிகளில் விளையாட விரும்பியதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை. வீரர் ஒருவரின் உடல்நிலை மற்றும் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் இயக்குநராக எனது கடமையை நான் சரியாக செய்துள்ளேன். தேவை எழுந்தால் பாபர் அசாமுக்கும் ஓய்வு அளிக்கப்படலாம். அவரிடம் இது குறித்துப் பேசுவோம். ஓய்வு வேண்டுமென விரும்பினால் அவருக்கு ஓய்வளிப்போம் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஷகின் அஃப்ரிடிக்கு ஓய்வளிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்களான வாசிம் அக்ரம் மற்றும் வாகர் யூனிஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.