முகப்பு
செய்திகள்

எனது முடிவை மாற்றிய ரோஹித்துக்கு நன்றி: பயிற்சியாளராக டிராவிட்டின் கடைசி உரை!

தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் கடைசி உரை.

Updated On : 2 ஜூலை, 2024 at 7:19 AM
ராகுல் டிராவிட்
பகிர்:

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய வீரர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உரையாடிய விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் உலகக் கோப்பையுடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளரின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது புதிய பயிற்சியாளர் பதவியேற்பார் என்றும், ஜூலை 6 முதல் ஜிம்பாப்வேவில் நடைபெறும் டி20 தொடருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணியுடன் செல்லவுள்ளார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் டிராவிட் உரையாடிய காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில், ராகுல் டிராவிட் பேசியதாவது:

“நம்பமுடியாத நினைவுகளில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்கு அனைவருக்கும் நன்றி. இந்த தருணங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக வெற்றி நம்மை நெருங்கி வந்தாலும் ஏமாற்றம் ஏற்பட்டது.

தற்போது நாம் அனைவரும் என்ன செய்தோம், உதவி ஊழியர்கள் என்ன செய்தார்கள், அனைவரின் கடின உழைப்பும் தியாகமும் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் உங்களின் சாதனையைப் பற்றி பெருமை கொள்கிறது.

கடந்த நவம்பர் மாதம் என்னை அழைத்து பயிற்சியாளராக தொடரச் சொன்னதற்கு நன்றி ரோஹித். உங்கள் அனைவரிடமும் இணைந்து பணியாற்றியது பாக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதிகிறேன். கேப்டனாக ரோஹித்தும் பயிற்சியாளராக நானும் நிறைய நேரம் விவாதிக்க வேண்டியது இருந்தது. சில சமயங்களில் நாம் உடன்படவும் இல்லை. ஆனால், அனைத்துக்கும் நன்றி ரோஹித்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளித்த பிசிசிஐக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →