முதல் டி20: இந்தியாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைவ் மடேன் 29 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் மற்றும் டியான் மையர்ஸ் தலா 23 ரன்கள் எடுத்தனர். வெஸ்லி மதேவீர் 21 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அறிமுகப் போட்டியில் களமிறங்கிய அபிஷேக் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (7 ரன்கள்), ரியான் பராக் (2 ரன்கள்), ரிங்கு சிங் (0 ரன்), துருவ் ஜுரெல் (6 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் போனாலும் மறுமுனையில் கேப்டன் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராஸா மற்றும் டெண்டாய் ஜாத்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பிரையன் பென்னட், வெலிங்டன் மசகட்ஸா, பிளஸிங் முஸர்பானி மற்றும் லூக் ஜோங்வி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.