மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜியா ராய் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை!
மாற்றுத்திறனாளியான ஜியா ராய் இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்..
இளம் வயதில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ஜியா ராய்
16 வயதே நிரம்பிய மாற்றுத் திறனாளியான ஜியா ராய், பிரிட்டனின் அப்போட்ஸ் கிளிஃப் பகுதியிலிருந்து பிரன்சின் பாய்ண்ட் டே லா கோர்ட்-ட்யூன் பகுதி வரை பாய்ந்தோடும் ஆங்கிலக் கால்வாயின் 34 கி.மீ. தூரத்தை, தனியொரு ஆளாக 17 மணி நேரம் 25 நிமிடங்களில் திங்கள்கிழமை(ஜூலை 29) நீந்திக் கடந்துள்ளார்.
இதன்மூலம், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் உலகின் இளம் வயது பாரா நீச்சல் வீராங்கனை என்ற சாதனையையும், குறைவான நேரத்தில் வேகமாக நீந்திக் கடந்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Advertisement
சர்வதேச பாரா நீச்சல் வீராங்கனையான ஜியா ராய், முன்னதாக பாக் வளைகுடாவை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜியா ராயின் திறமையையும் சாதனைகளையும் பாராட்டி, இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்திரிய பால புரஸ்கார் விருது’ கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது இந்த உலக சாதனை மூலம் ‘ஆட்டிஸம்’ குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை வீரரின் மகளான ஜியா ராயின் உலக சாதனைக்கு இந்திய கடற்படை சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.