முகப்பு
செய்திகள்

ரஞ்சி அரையிறுதி: மத்திய பிரதேசம் 252 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் ஹிமான்ஷு மந்த்ரியின் சதத்தினால் மத்திய பிரதேசம் 252 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 3 மார்ச், 2024 at 3:57 PM
பகிர்:

ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் ஹிமான்ஷு மந்த்ரியின் சதத்தினால் மத்திய பிரதேசம் 252 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (மார்ச் 2) தொடங்கின. முதல் அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் விளையாடி வருகின்றன.

மத்திய பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரூண் நாயர் அரைசதம் எடுத்தார். அவர் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக அதர்வா டைடு 39 ரன்கள் எடுத்தார். மத்திய பிரதேசம் சார்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. ஹிமான்ஷு மந்த்ரி 26 ரன்களுடனும், ஹர்ஷ் கௌலி 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். விதர்பாவைக் காட்டிலும் 123 ரன்கள் பின் தங்கிய நிலையில் மத்திய பிரதேசம் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

ஹிமான்ஷு மந்த்ரி மற்றும் ஹர்ஷ் கௌலி நிதானமாக விளையாடினர். இருப்பினும் ஹர்ஷ் கௌலி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கியவர்களில் சாகர் சோலங்கி (26 ரன்கள்) மற்றும் சரன்ஷ் ஜெயின் (30 ரன்கள்) இருவரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

களமிறங்கியது முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹிமான்ஷு மந்த்ரி சதம் அடித்து அசத்தினார். அவர் 265 பந்துகளில் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில் மத்திய பிரதேசம் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா தரப்பில் உமேஷ் மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, விதர்பா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஷோரே 10 ரன்களுடனும், அக்‌ஷய் வஹாரே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேசத்தைக் காட்டிலும் விதர்பா 69 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.