முகப்பு
செய்திகள்

ரோஹித் சிறந்த தலைவன்; அவருக்காக உயிரையும் தருவேன்: அஸ்வின் நெகிழ்ச்சி!

ராஜ்கோட் டெஸ்டில் அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் திடீரென கிளம்பவேண்டிய சூழ்நிலை குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

Updated On : 13 மார்ச் 2024, 4:05 pm IST
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்டில் அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் திடீரென கிளம்பவேண்டிய சூழ்நிலை குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதில் அஸ்வின் கூறியதாவது:

5ஆவது டெஸ்டின் 2ஆம் நாள் நான் 499 விக்கெட்டில் இருந்ததாக நினைவு. விசாகப்பட்டினத்திலேயே 500வது விக்கெட்டினை எடுப்பேன் என நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. எப்படியோ ஜாக் கிராவ்லியின் விக்கெட்டினை வீழ்த்தி 500 என்ற மைல் கல்லை எட்டினேன். ஆனால் அது சிறந்த பந்து அல்ல; இருந்தும் எனக்கு விக்கெட் கிடைத்தது.

அந்த நாள் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கலாம் என்றிருந்தேன். எனது வீட்டிலிருந்து எனது அப்பா அல்லது மனைவியிடம் இருந்து வாழ்த்து வருமென நினைத்திருந்தேன். ஆனால் 7 மணி வரை எந்த விசாரிப்பும் இல்லை. ஒருவேளை நேர்காணல், பேட்டியென அவர்கள் பிஸியாக இருப்பார்களென நினைத்திருந்தேன். எனது பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் எனது மனைவி எனக்கு போன் செய்தார், அவரது குரல் உடைந்திருந்தது. அணியினரை விட்டு எங்காவது தூரமாக செல் அல்லது தனியாக செல் எனக் கூறினார். கடுமையான தலைவலியால் எனது அம்மா மயக்கமடைந்து நிலைகுலைந்து விட்டதாக கூறினார்,

Advertisement

Advertisement

எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. முதலில் நான் அழுதுவிட்டேன். எனது மனைவியிடம் என்னக் கேட்க வேண்டுமெனவும் தெரியவில்லை. நான் அழுவதை யாரும் பார்க்க விரும்பவில்லை. எனது அறையில் தனியாக இருந்தேன். வீட்டிற்கு போகவும் தோன்றுகிறது மறுபுறம் அணியில் நான் சென்றுவிட்டால் 10 பேருடன் விளையாடினால் இங்கிலாந்துக்கு சாதகமாகும் எனவும் தோன்றியது. குழப்பத்தில் அமர்ந்திருந்தேன்.

நான் எனது மனைவியின் தொடர்பை துண்டித்ததால் அநேகமாக திராவிட் அல்லது ரோஹித்துக்கு அவர் பேசியிருப்பார். சிறிது நேரத்தில் ரோஹித் எனது அறைக்கு வந்து, ‘இங்கு என்ன செய்கிறாய்? உடனே நீ கிளம்ப வேண்டும். உன்னுடைய துணிகளை எடுத்து வை’ எனக் கூறினார்,

புஜாராவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் விமானம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்தான் யார் யாருடனோ பேசித் தயார் செய்தார், என்னுடன் உடற்பயிற்சியாளர் கமலேஷும் வந்தார். அணிக்கு இருக்கும் 2 பேரில் அவரும் ஒருவர். நான் கமலேஷிடம் பரவாயில்லை நீங்கள் இங்கயே இருங்கள் எனக் கூறியும் கேட்கவில்லை. ரோஹித் அவருடன் தொடர்ந்து தொடர்புகொண்டு பேசினார். இரவு நேரத்திலும் அவருக்கு கால் செய்து நான் எப்படி இருக்கிறேன் என்பதை விசாரித்துக்கொண்டிருந்தார்.

நான் கேப்டனாக இருந்தாலும் விடுப்பு கொடுத்திருப்பேன், ஆனால் உடன் எனக்கு ஒரு துணையை அனுப்பி இப்படியெல்லாம் விசாரித்து இருப்பேனா தெரியவில்லை. சுயநலமான இந்த உலகத்தில் ரோஹித் மாதிரி ஒருவர் அடுத்தவர்களைப் புரிந்து நடப்பது அரிது. ரோஹித் சிறப்பான மனிதர், சிறந்த தலைவன்; தங்கம் போன்ற மனம் உடையவர். அவருக்காக ஆடுகளத்தில் எனது உயிரையும் தருவேன். அப்படியான கேப்டன் அவர். அதனால்தான் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். இன்னும் பல கோப்பைகளையும் சாதனைகளையும் ரோஹித் அடைய வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments