இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 18) சட்டோகிராமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 235 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜனித் லியாநாகே 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக சரித் அசலங்கா 37 ரன்களும், கேப்டன் குஷால் மெண்டிஸ் 29 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முஸ்தபிசூர் மற்றும் மெஹிதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளையும், சௌமியா சர்கார் மற்றும் ரிஷாத் ஹொசன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணி 40.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 84 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷாத் ஹொசைன் அதிரடியாக 18 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாத் ஹொசைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.