முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து ஷிவம் துபே மனம் திறந்துள்ளார்.

Updated On : 2 மே, 2024 at 1:17 PM
ஷிவம் துபே - படம் | சிஎஸ்கே
பகிர்:

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து ஷிவம் துபே மனம் திறந்துள்ளார்.

வருகிற ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியாக இருந்ததால் தூக்கமின்றி தவித்ததாக ஷிவம் துபே மனம் திறந்துள்ளார்.

Advertisement

இந்திய அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுக வீரராக துபே களமிறங்கினார். ஆனால், கடந்த ஆண்டுக்கு முன்பு வரை அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய விதம் அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது. இதன்மூலம், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் துபேவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நடப்பு ஐபிஎல் தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தால் ஷிவம் துபே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான போட்டியாளராக அவர் மாறினார். கடந்த ஜனவரியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த டி20 தொடரில் 60* (40) மற்றும் 63* (32) ரன்கள் எடுத்து இந்திய அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின்போது ரோஹித் சர்மா தன்னிடம் கூறியதாக ஷிவம் துபே கூறியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ரோஹித் சர்மா என்னிடம், உனக்கு பந்துவீச மற்றும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றார். உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை எங்களுக்குக் காட்டு எனக் கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு உந்துசக்தியாக அமைந்து சிறப்பாக விளையாட உதவியது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரிலும் ஷிவம் துபேவின் அசத்தலான ஃபார்ம் தொடர்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவர் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் என இருவரின் பந்துவீச்சுகளிலும் அதிரடியாக விளையாடுகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை 350 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கினைப் போன்று அச்சு அசலாக விளையாடுவதாக துபேவின் பேட்டிங்கைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

யுவராஜ் சிங் (கோப்புப்படம்)

இது தொடர்பாக துபே பகிர்ந்து கொண்டதாவது: இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குடன் எனது பேட்டிங்கை ஒப்பிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியில் இடம்பிடித்தபோது, அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி என்னை யுவராஜ் சிங்கினைப் போன்று சிக்ஸர் அடிக்க வேண்டும் எனக் கூறுவார். யுவராஜ் சிங்கிடமிருந்து நான் இதனைக் கற்றுக் கொண்டுள்ளேன். அவர் முதல் 7-8 பந்துகளில் பெரிய ஷாட்டுகள் விளையாடி ரன்கள் எடுக்காவிட்டாலும், ஆட்டத்தின் இறுதியில் அதற்கேற்றவாறு விளையாடி ரன்கள் எடுத்துவிடுவார். இந்த விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக் கொண்டு அதனை செயல்படுத்த முயற்சித்து வருகிறேன் என்றார்.

சிஎஸ்கே அணிக்காக பயிற்சி முகாமில் இணைந்தபோது எம்.எஸ்.தோனி மற்றும் பயிற்சியாளர் ஃபிளமிங் கூறியதாக துபே கூறியதாவது: பயிற்சி முகாமில் இணைந்தபோது, உனது வேலை பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களைக் குவிப்பது என தோனி மற்றும் ஃபிளமிங் கூறினார்கள். ஆனால், முதல் பந்திலிருந்தே அடித்து விளையாட வேண்டும் என அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அவர்களுக்கு என் மீது நம்பிக்கையிருக்கிறது. அதனால், முதல் 10 பந்துகளில் நான் ஏன் ஆபத்தான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இதே ஃபார்முடன் ஷிவம் துபே அதிரடியில் மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments