முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் 3-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 16 மே, 2024 at 3:45 PM
ஷகிப் அல் ஹசன்
பகிர்:

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் 3-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான நஜ்முல் ஹொசைன் தலைமையிலான 15 பேர் கொண்ட வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது. வங்கதேச அணியில் அனுபவமிக்க ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இடம்பெற்றுள்ளார்.

வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் 5-வது அல்லது 6-வது வீரராக அண்மைக் காலங்களில் களமிறங்கி வருகிறார். ஆனால், வங்கதேச அணிக்காக அவர் கடந்த காலங்களில் 3-வது வீரராகவும் களமிறங்கியுள்ளார். வருகிற டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் மீண்டும் 3-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் இதுவரை 12 அரைசதங்கள் அடித்துள்ளார். அதில் 7 அரைசதங்கள் அவர் 3-வது வீரராக களமிறங்கியபோது அடித்ததாகும். மற்ற இடங்களைக் காட்டிலும் 3-வது வீரராக களமிறங்கி விளையாடியபோது, ஷகிப் அல் ஹசன் அதிக ரன்கள் எடுத்துள்ளார். 3-வது வீரராக களமிறங்கி ஷகிப் அல் ஹசன் இதுவரை 1085 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் வீரர்கள் களமிறக்கப்படுவது தொடர்பாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் பேசியதாவது: ஆட்டத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், எதிரணியின் பலத்தினை கருத்தில் கொண்டும் வீரர்கள் களமிறக்கப்படும் இடங்கள் முடிவு செய்யப்படும். ஷகிப் அல் ஹசனை 3-வது வீரராக களமிறக்கும் திட்டம் இருக்கிறது. அவர் 3-வது வீரராக களமிறக்கப்படலாம். டி20 போட்டிகளில் வீரர்கள் களமிறங்கும் இடங்கள் மாறிக் கொண்டே இருக்கும். எந்த இடத்தில் களமிறங்கினாலும், சிறப்பாக பேட் செய்வது அவசியம் என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற ஜூன் 7 ஆம் தேதி வங்கதேசம் தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →