வலுவாக மீண்டு வருவேன்; உலக தடகள சாம்பியன்ஷிப்பிலிருந்து வெளியேறிய பிறகு நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பின்ஷிப்பிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வலுவாக மீண்டு வருவேன் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பின்ஷிப்பிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் வலுவாக மீண்டு வருவேன் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. அதில், ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஐந்தாவது சுற்றில் அவர் வெளியேறினார்.
நீரஜ் சோப்ராவுடன் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அறிமுக வீரராக பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த சச்சின் யாதவ், 4-வது இடம் பிடித்து நிறைவு செய்தார்.
இந்த நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப்பை இவ்வாறு முடிப்பேன் நினைக்கவில்லை எனவும், வலுவாக மீண்டு வருவேன் எனவும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலக தடகள சாம்பியன்ஷிப்பை இவ்வாறு நிறைவு செய்வேன் என நினைக்கவில்லை. அனைத்து சவால்களையும் தாண்டி இந்தியாவுக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்க நினைத்தேன். ஆனால், முடிவுகள் சரியாக வரவில்லை.
சச்சின் யாதவை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கிட்டத்தட்ட அவர் இந்தியாவுக்காக பதக்கத்தை உறுதி செய்தார். உங்களுடைய அனைவரின் ஆதரவுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களது ஆதரவு என்னை மீண்டும் வலுவாக திரும்பி வரச் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.