வெண்கலத்துடன் வெளியேறியது இந்தியா: அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வி
ஹார்சென்ஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-3 என்ற கணக்கில் பிரான்ஸிடம் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.
லக்ஷயா சென் காயத்தால் பங்கேற்க முடியாமல் போனதால் இந்த டை இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதுவே நிகழ்ந்தது. இந்தியா ஒரு கேமை கூட கைப்பற்ற முடியாமல் போக, டை முற்றிலுமாக பிரான்ஸ் பக்கமாக சாய்ந்தது.
முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில், உலகின் 18-ஆம் நிலை வீரரான ஆயுஷ் ஷெட்டி 11-21, 9-21 என்ற நேர் கேம்களில், 4-ஆம் நிலை வீரரான கிறிஸ்டோ போபோவிடம் தோல்வியுற்றார். இந்த ஆட்டம் 39 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
Advertisement
அடுத்து 30-ஆம் நிலை வீரரான கே.ஸ்ரீகாந்த் 16-21, 18-21 என்ற கணக்கில், 10-ஆம் நிலை வீரரான அலெக்ஸ் லேனியரிடம் 41 நிமிஷங்களில் தோல்வி கண்டார்.
இந்தியாவுக்கான கடைசி வாய்ப்பாக இருந்த 3}ஆவது ஒற்றையர் ஆட்டத்தில், 35-ஆம் நிலையில் இருக்கும் ஹெச்.எஸ். பிரணய் 19-21, 16-21 என, 17-ஆம் நிலையில் இருக்கும் டோமா ஜூனியர் போபோவால் 48 நிமிஷங்களில் சாய்க்கப்பட்டார்.
இதனால் அந்த டை முற்றிலுமாக பிரான்ஸ் வசமானது. இதையடுத்து எஞ்சிய இரு இரட்டையர் ஆட்டங்களும் கைவிடப்பட்டன. இந்தியா வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது.
2022-ஆம் ஆண்டு சாம்பியனான இந்தியாவுக்கு, போட்டியில் இது 4-ஆவது வெண்கலப் பதக்கமாகும். ஏற்கெனவே இந்தியா 1952, 1955, 1979 ஆகிய ஆண்டுகளில் வெண்கலம் வென்றுள்ளது.