முகப்பு
டி20 உலகக் கோப்பை

வங்கதேசத்தைப் பந்தாடிய அசலங்கா: முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சரித் அசலங்காவின் சிறப்பான பேட்டிங்கால் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:


வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சரித் அசலங்காவின் சிறப்பான பேட்டிங்கால் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. முதல் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு மோசமான தொடக்கம் அமைந்தது. நசும் அகமது வீசிய முதல் ஓவரிலேயே குசால் பெரேரா 1 ரன்னுக்கு போல்டானார்.

இதன்பிறகு, பதும் நிசன்காவுடன் சரித் அசலங்கா பாட்னர்ஷிப் அமைத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த பாட்னர்ஷிப்பை ஷகிப் அல் ஹசன் பிரித்தார். நிசன்கா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அவிஷ்கா பெர்னான்டோவையும் போல்டாக்கி அசத்தினார் ஷகிப். அடுத்து களமிறங்கிய வனிந்து ஹசரங்காவும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆனால், அசலங்கா தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அவ்வப்போது சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அசத்தினார். மறுமுனையில் பனுகா ராஜபட்ச, அவர் பங்குக்கு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து அசத்தினார். இருவரும் அரைசதம் கடந்தனர்.

வெற்றியை நெருங்கிய நேரத்தில் ராஜபட்ச 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், அசலங்காவும் கேப்டன் தசுன் ஷனாகாவும் வெற்றியை உறுதி செய்தனர்.

18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் எடுத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →