டி20 உலகக் கோப்பைத் தொடரில் தான் கைப்பற்றிய விக்கெட்டுகளுக்கு காரணம் ஜஸ்பிரித் பும்ரா என அர்ஷ்தீப் சிங் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அதன் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் தான் கைப்பற்றிய விக்கெட்டுகளுக்கு காரணம் ஜஸ்பிரித் பும்ரா என அர்ஷ்தீப் சிங் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் அதிக விக்கெட்டுகள் எடுப்பதற்கான பெருமையெல்லாம் ஜஸ்பிரித் பும்ராவையேச் சேரும். ஏனென்றால், அவர் ரன்கள் கொடுக்காமல் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறார். ஒரு ஓவரில் அவர் வெறும் 3 அல்லது 4 ரன்களை மட்டுமே கொடுக்கிறார். அதனால், என்னுடைய ஓவரில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முயற்சி செய்து விக்கெட்டினை இழக்கின்றனர்.
அந்த நேரத்தில் எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும்போது, வெற்றி பெறுவற்கு எதிரணிக்கு தேவைப்படும் ரன் ரேட் அதிகமாகிறது. அந்த சமயத்தில் எனக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்டுகளை விளையாடுவதால், விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால், நான் கைப்பற்றும் விக்கெட்டுகளுக்கான பெருமையெல்லாம் பும்ராவையேச் சேரும் என்றார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.