துரத்துகிறது வறுமை : அடகுக்குச் செல்கிறது ரேஷன் கார்டு!
குன்னூர், ஜூலை 29: குன்னூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பலரது ரேஷன் அட்டைகள் சட்ட விரோதமாக அடகு வைக்கப்பட்டு மீட்க முடியாத நிலையில் உள்ளன. இப் பகுதிகளில் ஆயிரக்கணக்க
குன்னூர், ஜூலை 29: குன்னூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பலரது ரேஷன் அட்டைகள் சட்ட விரோதமாக அடகு வைக்கப்பட்டு மீட்க முடியாத நிலையில் உள்ளன.
இப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான எஸ்டேட் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் வாங்கும் தினக்கூலி அன்றாட உணவிற்கே போதாத நிலையில் பள்ளிப் படிப்பு, மருத்துவச் செலவு உள்ளிட்ட திடீர் செலவுகளுக்கு இவர்களிடம் இருக்கும் ஒரே அடகுப் பொருள் ரேஷன் அட்டையாகவே உள்ளது.
குன்னூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமார் 65 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கார்டுகள் வட்டிக்குச் சென்றுவிடுகின்றன.
இதனை இவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் அடகு வைத்து அதன் மூலம் ரூ. ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கடன் பெறுகின்றனர். இந்தக் கடன் தொகைக்கான வட்டி 5 முதல் 10 சதவீதம்.
கடனை அடைக்கும்வரை குடும்ப அட்டை மூலம் மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை வட்டிக்காரரே வாங்கிக் கொள்கிறார்.
குடும்ப அட்டை மூலம் மலிவாகக் கிடைக்கும் பொருட்களை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வட்டிக்கடைக்காரர்கள் குறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகாரருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும்.
ரேஷன் அட்டைகளை அடகு வைக்கவோ, அடகு பிடிக்கவோ கூடாது என்று அரசு எச்சரித்திருந்தாலும் வறுமை துரத்தும்போது ஏழைகளுக்குக் கை கொடுப்பது இந்த ரேஷன் அட்டைதான் என்பதை மறுப்பதற்கில்லை.
குடும்ப அட்டையை வட்டிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு அரசின் ஒரு ரூபாய் அரிசியை வெளிச்சந்தையில் ரூ. 8 முதல் ரூ.10 வரை கொடுத்தும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை ரூ.25 முதல் 30 வரை கொடுத்தும் வாங்கிச்செல்லும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இந்தத் தொழிலாளர்கள்.
இன்னும் 6 மாதங்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்போகும் நிலையில் அவற்றின் முகவரி மாற்றும் பணி உள்ளிட்டவற்றை அதே ரேஷன் கடை ஊழியர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. அடகு பிடித்தவர்கள் இவர்களை அழைத்துவந்து புதுப்பித்துக்கொண்டுவிட்டு மீண்டும் அவற்றைக் கைப்பற்றும் வாய்ப்பே அதிகம். ரேஷன் அட்டைகளை மீட்க அரசும் அதிகாரிகளும் முன்வருவார்களா?