தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் 45,000 ஆசிரியர்கள்; ரூ.2,000 கோடி நிதி!: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
சென்னை, செப். 17: தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான் - ஆர்.எம்.எஸ்.ஏ.) தமிழகத்துக்கு சுமார் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட
சென்னை, செப். 17: தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான் - ஆர்.எம்.எஸ்.ஏ.) தமிழகத்துக்கு சுமார் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி 1,900 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும், இப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 45,865 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி, தரம் வாய்ந்த ஆய்வகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன.
Advertisement
தாழ்த்தப்பட்ட - பழங்குடி மாணவிகள், சிறுபான்மையினத்தவர் மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகளை உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
ரூ.20,120 கோடியில்...: நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு 11-வது நிதியாண்டில் ரூ.20,120 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 90 சதவீதம், மாநில அரசின் பங்கு 10 சதவீதமாகும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கு எத்தனை ஆசிரியர்கள் தேவை, பள்ளிகள் போன்ற விவரங்களை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு என்னென்ன தேவை என்பது குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1,900 பள்ளிகள் தரம் உயர்த்தப் பரிந்துரை: ""தமிழகத்தில் சுமார் 9,938 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 1,900 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கு மட்டும் 45,865 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர் தேவை குறித்தும் கேட்டுள்ளோம்'' என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி கேட்டு பரிந்துரை: கூடுதல் வகுப்பறைகள், கூடுதல் ஆசிரியர்கள், தரம் வாய்ந்த ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர் நியமனம் என பல்வேறு தேவைகளுக்காக தமிழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.2,000 கோடி வரை நிதி ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான மத்திய அரசின் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
சமச்சீர் கல்வி -வரைவு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி மும்முரம்: சமச்சீர் கல்விக்காக "பொதுக் கல்வி வாரியம்' பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பெருமாள்சாமி தலைமையில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சமச்சீர் கல்விக்காக பொதுவான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி, தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் இந்த வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 60 ஆசிரியர்கள் குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த வரைவுப் பாடத்திட்டம் தயாரித்து முடிந்தவுடன், பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.