அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நிரந்தர இடம்
சென்னை, ஏப்.2: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) நிரந்தர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் 22 கிரவுண்ட் (52,800 சதுர அடி) நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஓமந்
சென்னை, ஏப்.2: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) நிரந்தர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் 22 கிரவுண்ட் (52,800 சதுர அடி) நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வந்தது. புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கு நிலம் தேவைப்பட்டது.
இதனால், அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்களில் சிலவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதில், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகமும் ஒன்று.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து, சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. இடம் மாறியது.
அரசினர் தோட்டத்தில் இருந்தபோது, டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தின் பரப்பளவு ஒரு லட்சம் சதுர அடிக்கு மேலாக இருந்தது. ஆனால், தாற்காலிக இடம் வெறும் 50 ஆயிரம் சதுர அடிப்பரப்புக்கு மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னையின் மையப் பகுதியில் நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என தேர்வாணைய ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கை முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பாரிமுனையில் உள்ள "மெட்ராஸ் யூனியன் கிளப்' (எம்.யூ.சி.) மைதானத்தில் 22 கிரவுண்ட் நிலத்தை டி.என்.பி.எஸ்.சி.க்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியது:
புதிய இடத்தைத் தேர்வாணைய மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டாகப் பார்வையிட்டனர். இடம் ஒதுக்கப்பட்டதற்கான முறையான உத்தரவு விரைவில் வெளியிடப்படும். எம்.யூ.சி. மைதானத்தில் பல் மருத்துவக் கல்லூரியின் விரிவாக்கக் கட்டடம் ஏற்கெனவே கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு எஞ்சியுள்ள 22 கிரவுண்ட் நிலத்தில் டி.என்.பி.எஸ்.சி.க்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் இதற்கான பணிகள் முடிவடையும் என்றனர்.
மாநில நுகர்வோர் தீர்ப்பாயம்: சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் "மாநில நுகர்வோர் தீர்ப்பாயம்' செயல்பட்டு வருகிறது. வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இந்தத் தீர்ப்பாயத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட அதே எம்.யூ.சி. மைதானத்தில் 6 கிரவுண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து: பாரிமுனைப் பகுதியில் பேருந்து போக்குவரத்துக்குப் பிரச்னை கிடையாது. அங்கு, தேர்வாணைய அலுவலகம் அமைய இருப்பதால் அலுவலர்களும், தேர்வர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.