ஆள் பற்றாக்குறை: ரேஷன் கார்டுதாரர்கள் அவதி
திருத்தணி, டிச. 11: திருத்தணி வட்ட வழங்கல் அலுவலகத்தில், அலுவலர்கள் பற்றாக்குறையால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்யும் மனுதாரர்கள், பெயர் நீக்கம், சேர்த்தல் செய்ய வரும் பொதுமக்கள் அவதிப்ப
திருத்தணி, டிச. 11: திருத்தணி வட்ட வழங்கல் அலுவலகத்தில், அலுவலர்கள் பற்றாக்குறையால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்யும் மனுதாரர்கள், பெயர் நீக்கம், சேர்த்தல் செய்ய வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் அமைந்துள்ளது வட்ட வழங்கல் அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டும், பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய, தினமும் நூற்றுக்கணக்கானோர் மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர், சிறப்பு வருவாய் அலுவலர், இரண்டு வருவாய் ஆய்வாளர் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது வட்ட வழங்கல் அலுவலர், ஒரு சிறப்பு வருவாய் அலுவலர், ஒரு வருவாய் ஆய்வாளர், ஒரு அலுவலக உதவியாளர் மட்டும் பணிபுரிகின்றனர்.
இதனால் அலுவலகத்துக்கு பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய வரும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து மனு கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் சில நேரங்களில் வட்ட வழங்கல் அலுவலர் சிறப்பு ஆர்.ஐ., அலுவலக கூட்டம், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு சோதனை (ஆய்வு) என அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியுள்ளது.
அந்த நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதே போல புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் கொடுக்க பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அலுவலக உதவியாளர் ஒருவர் மட்டுமே பணிபுரிவதால், பொதுமக்கள் கொடுக்கும் அனைத்து மனுக்களையும் வாங்கி பில் போட்டு தர வேண்டியுள்ளது.
மேலும் அலுவலர்கள் பற்றாக்குறையால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்யும் மனுதாரர்கள் இருப்பிடத்துக்கு சென்று, உரிய நேரத்தில் ஆய்வு செய்து மனுக்களை தலைமையிடத்துக்கு அனுப்ப முடியவில்லை. வட்ட வழங்கல் அலுவலகத்தில், அலுவலர்கள் பற்றாக்குறையால் ரேஷன் கார்டு உறுப்பினர்கள் சிறிய திருத்தம் செய்வதற்கு கூட, ஒரு நாள் முழுவதும் அலுவலக வளாகத்திலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, திருவாலங்காடு பகுதியிலிருந்து திருத்தணிக்கு பஸ் வசதி கிடையாது. ஆனால் அப்பகுதியில் இருந்து யாரேனும் மோட்டார் சைக்கிள், டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு திருத்தணிக்கு வர வேண்டியுள்ளது. அப்படி வந்தும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் மேற்கண்ட பணிகளை முடிக்க முடியாமல், ரேஷன் கார்டுதாரர்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கராஜ் கூறியது: திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி ஆகிய தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு வருவாய் அலுவலர், வருவாய் அலுவலர், அலுவலக உதவியாளர்கள் போன்ற அலுவலர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக வட்ட வழங்கல் துறைகளில் அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம் என்றார் அவர்.