கோவை, பிப்.25:இளைஞர்களுக்கு கவிதை எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது வானம்பாடி கவிஞர்களின் படைப்புகள் தான் என்றார் சாகித்ய அகாதெமி விருது
பெற்ற கவிஞர் புவியரசு.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரது ஏற்புரை:
வானம்பாடி கவிஞர்களில் ஒருவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயமல்ல. நாங்கள் மரபைப் படித்து மரபை மீறியவர்கள், அடிப்படை இல்லாதவர்கள் அல்ல. எங்களது கவிதைகள் புரட்சிகரமானது.
இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கவிதை எழுதக் காரணமாக இருப்பது வானம்பாடி இயக்கம் தான். மார்க்சீய அடிப்படையில் சமூகப் பிரச்னைகளை கவிதையில் கொடுப்பது என்று வானம்பாடி குழு முடிவு செய்தது. இதன்படி அக்னிபுத்திரன், முல்லைஆதவன், நித்திலன், இளமுருகு என வானம்பாடி கவிஞர்கள், தங்களது படைப்புகளை பாமரனுக்கும் புரியும் வகையில் கொண்டு வந்தனர்.
கவிதை என்பது ஜனநாயகமான விஷயம்; அனைவருக்கும் சொந்தம் என்பதை உணர்த்தியவர்கள் வானம்பாடி கவிஞர்கள் தான். இரண்டாம் முறையாக சாகித்ய அகாதெமி விருது பெறுவதைப் பெருமையாகக் நினைக்கிறேன். அதை விடவும் பெருமையாகக் கருதுவது, நான் பேரூர் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதும், முதல் மாணவன் என்பதுதான் என்றார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கல்லூரி முதல்வர் ம.மனோன்மணி உள்ளிட்டோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.